கல்வி மூலமே சமூகத்தில் சிந்தனை மாற்றங்களை கொண்டுவரமுடியும்
(பொன் சற்சிவானந்தம்)
சமூகத்தை அபிவிருத்தி செய்வதில் அரச அதிகாரிகள்,பொது நிறுவனங்கள் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்தால் அதில் வெற்றி காணமுடியும். மக்களை தொடர்ந்து கையேந்தும் நிலமைக்கு நாம் வழிவகுக்க கூடாது என மாவட்ட உதவிச் செயலாளர் நடராஜா பிரதீபன் தெரிவித்தார்.
இளைஞர் அபிவிருத்தி அகத்தின் 22வது வருடாந்த ஒன்று கூடல் திருகோணமலை சர்வோதய நிலயத்தில் நேற்று மாலை சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி இடம்பெற்றது.
தலைவர் திருமதி.சுஜாத்தா சிவராஜன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் இருந்து கலந்து கொண்டனர்.
இங்கு நினைவுக்குறிப்பேடு ஒன்றும் வெளியிடப்பட்டது. அதனை மாவட்ட உதவிச் செயலாளர் ந.பிரதீபன் வெளியிட அகத்தின் ஆலோசகர் சக்திவேல் பாலகிருஸ்ணன் பெற்றுக்கொண்டார்.
இங்கு மேலும் குறிப்பிட்டஉதவி மாவட்டசெயலாளர் பிரதீபன், யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. மக்களின் நடமுறையில் நிலைபேறான மாற்றங்களை காணமுடியவில்லை. கல்வியிலும் நாம் அக்கறை செலுத்தவேண்டியுள்ளது.
கல்வி மூலமே சமூகத்தில் சிந்தனை மாற்றங்களை கொண்டுவரமுடியும் இதனால் எமது மாவட்ட செயலகம் கல்வி மற்றும் அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்கு தடையின்றி பொது நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி ஊக்கப்படுத்துகின்றது.
வாழ்வாதாரத்திற்கென பல மில்லியன்கள் செலவிடப்பட்டாலும் 80 வீதமானவை தோல்வியில்தான் முடிந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
எனவே அகத்தின் நீண்டகால நோக்கான சுயசார்புள்ள மக்களை உருவாக்கும் இலக்கின் அடிப்படையில் மக்களை பொருளாதாரத்தில் சொந்தக்காலில் நிற்கவைப்பதுடன் மற்றவர்களில் தங்கி வாழும் நிலமையை இல்லாது ஆக்கவேண்டும்.
இனி மேல் யுத்தத்தை சாட்டாக சொல்லி கல்வி உள்ளிட்ட வளர்ச்சிகளை நாம் குறைத்து மதிப்பிடமுடியாது.
எனவே இதனை உணர்ந்து சகலரும் ஒத்துழைத்து நிலையான அபிவிருத்தி மாற்றத்திற்கு உழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட சமூகசேவை அதிகாரி ஜே.சுகந்தினி, அகத்தின் மதியுரைஞர்.ச.பாலகிருஸ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.







No comments