Breaking News

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!





திருமலையில் மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி குழந்தை பிரசவிக்க காரணமான தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

திருகோணமலையில் சொந்த மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி குழந்தை பிரசவத்துக்கு காரணமாக இருந்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த சம்பவம் 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்றதாகவும், கர்ப்பம் தரித்த பின்னரே இவ்விடயம் பொலிஸ் முறைப்பாட்டுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின்போது கர்ப்பமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக வைத்திய கலாநிதி நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

சந்தேக நபரான தனது தந்தை தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதன் காரணமாகவே தனக்கு இந்நிலை ஏற்பட்டதாகவும் சிறுமி நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் சாட்சியத்தின் பின்னர் மன்றில் ஆஜராகாது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் சந்தேக நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 5 இலட்சம் ரூபா நஷ்டஈடும் வழங்குமாறும் இதனை வழங்க தவறும் பட்சத்தில் மேலும் 2 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்படுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் கைது செய்யுமாறு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், பகிரங்க பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


No comments