மட்டக்களப்பில் கலாபூஷனம் வேலழகனின் ஐந்து நூல்கள் வெளியீடு.
முதுபெரும் தமிழ் இலக்கியவாதியான கலாபூஷணம். திரு. ஆ. மு. சி வேலழகனினால் உருவாக்கப்பட்டிருக்கும் ஐந்து நூல்கள் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தினால் வெளியீட்டு செய்யப்படவுள்ளது.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும், அறிவாற்றம் காக்கம் குருவி எனும் பெயர்களிலான நாவல்கள் இரண்டும், தென்னாடுடையவனே எந்நாட்டிலும் எனும் ஆய்வுநூலும், கீழைக்காற்று எனும் கவிதைத் தொகுதியும், மறக்கமுடியுமா எனும் நினைவுப் பகிர்வுமாக ஐந்து நூல்கள் எதிர்வரும் சனிக்கிழமை பிள்ளையாரடியில் அமைந்துள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புலவர் வீ. ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் முதன்மை அதிதியாகவும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன் மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர். முரளிஸ்வரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அறிவு திறன் ஆற்றல் அனுபவ முதிர்ச்சி பெற்ற மூத்த வளப் பேராளர் கலாபூஷணம். ஆ. மு. சி வேலழகனினால் உருவாக்கப்பட்ட இந் நூல்களை வெளியீட்டு நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர்கள், சிரேஸ்ட ஆணையாளர்களால் நூல் நயவுரையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments