கிண்ணியாவில் மேலும் எட்டு நபர்களுக்கு கொரோனா தொற்று!
(கியாஸ் ஷாபி )
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட இரு பகுதிகளில் இருந்து இன்று (2021.01.13) வைத்தியர் ஒருவர் உட்பட, 8 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி சற்று முன்னர் தெரிவித்தார்.
இது குறித்து அவர், மேலும் கூறுகையில், மாலிந்துறை கிராம சேவகர் பிரிவில் இருந்து 5 நபர்களும், 2021.01.11 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவின் ஹிஜ்ரா வீதியில் இருந்து 3 நபர்களும் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று (13) பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து 42 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜென் பரிசோதனையிலே இதில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிண்ணியா வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர், அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின் மூலம் தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டார்.
இதேவேளை, கடந்த 2021.01.10 ஆம் திகதி PCR பரிசோதனைக்காக மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் இன்று கிடைத்திருக்கின்றன. இதில் 3 நபர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஹிஜ்ரா வீதியைச் சேர்ந்த, முன்னர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களின் முதன்னிலை தொடர்பாளர்களாகும்.
இதன்படி, இன்று எமது சுகாதாரப் பிரிவில் 8 நபர்கள் வைரஸ் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அவர், மேலும் கூறுகையில், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த 2வது கொரோனா அலைக்குப் பின்னர் மொத்தமாக 42 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.






No comments