கிண்ணியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!!
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை கிராம சேவகர் பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி இன்று (9) இரவு தெரிவித்தார்.
அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று திருகோணமலையில் கிண்ணியாவோடு குடும்ப ரீதியான தொடர்புடைய ஒருவர் கொரோனா தொற்றாளியாக இனங்காணப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் கிண்ணியாவில் உள்ள அவருடைய முதல் நிலை உறவினர்களை அவசரமாக அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு திருகோணமலை நகர சுகாதார வைத்திய அலுவலகத்தால், விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இன்றிரவு 7 நபர்களுக்கு அன்டிஜென் பரிசோதனையை மேற்கொண்டோம்.
இதன்போது, 5 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், ஒரே குடும்பத்தில் இருந்து தந்தையும் மகனும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
இவர்களோடு, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து மொத்தமாக 22 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.







No comments