பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கருத்து பொறுப்பற்றது!
பொறுப்புள்ள அதிகாரி ஒருவரின் பொறுப்பற்ற அறிக்கை குறித்து கவலையடைகின்றேன். இம்ரான் எம்.பி.
பொறுப்புள்ள சுகாதார அதிகாரி ஒருவரின் பொறுப்பற்ற அறிக்கை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என திருகோணமலை மாவட்டப் நாடாளுன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இறந்த கொரோனா நோயாளிகள் இரகசியமாக அடக்கம் செய்யப்படுகின்றார்கள் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இம்ரான் எம்.பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் பொலிஸார் கடமையில் உள்ளனர். அதேபோல பாதுகாப்புப் படையினரும் கடமையில் உள்ளனர். சகல இறப்புகளும் உரிய- முறைப்படி பொலிசுக்கு அறிவிக்கப்பட்டு உரிய விசாரணைகளின் பின்பே அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் பொறுப்புவாய்ந்த ஒரு சுகாதார சேவை அதிகாரி பொறுப்பற்ற முறையில் ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளமை குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன். இந்த அறிக்கையின் மூலம் அவரது நேர்மைத் தன்மை குறித்த சந்தேகம் பொதுமக்களிடையே வலுவடைந்துள்ளது.
இறப்புகளிலோ அல்லது இறந்த உடல்களிலோ அவருக்கு சந்தேகம் இருக்குமாயின் சட்ட ரீதியான செயற்பாடுகளை அவர் முன்னெடுக்க முடியும். அதற்கான உரிமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்ற முறையில் அவருக்கு இருக்கின்றது. இதனை விடுத்து பொறுப்பற்ற முறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பது முறையான செயலல்ல.
இன்று இந்நாட்டில் சில ஊடகங்கள் இனவாதத்தைக் கையிலெடுத்து செயற்படுகின்றன. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் இந்த ஊடகச் செய்தி இவ்வாறான ஊடகங்களுக்கு தீனி போடுவது போல் அமைந்துள்ளன.
எனவே, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது இந்த ஊடகத் தகவலின் உண்மைத்தன்மை குறித்து தெளிவு படுத்த வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கு எற்பட்டுள்ள சந்தேகத்தை அவர் நிவர்த்தி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






No comments