காலஞ்சென்ற கமல் ரத்வத்தே பூதவுடலுக்கு பிரதமர் இறுதி அஞ்சலி.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் காலஞ்சென்ற கமல் ரத்வத்தே அவர்களின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (04) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கொழும்பில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு பிரதமர் மற்றும் பிரதரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கமல் ரத்வத்தே தனது 61ஆவது வயதில் நேற்று (03) பிற்பகல் காலமானார்.
அன்னார் முன்னாள் பிரதமர் அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்க சகோதரரான க்ளிஃபர்ட் ரத்வத்தேயின் புதல்வராவார். மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உறவினரும் ஆவார்.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையின் உப தலைவராகவும், தேசிய காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராகவும் சேவையாற்றி வந்த கமல் ரத்வத்தே 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவராக பணியாற்றினார்.
அன்னாரது இறுதி கிரியைகள் இன்று பொரளை மயானத்தில் இடம்பெறவுள்ளது.
பிரதமர் ஊடக பிரிவு








No comments