கிண்ணியாவை பாதுகாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை!
( கியாஸ் ஷாபி)
கிண்ணியாவில் அத்தியவசிய கடைகளைத் தவிர, ஏனைய கடைகள் அனைத்தும் இன்று (22) மூடப்பட்டிருந்தன.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கடந்த ஞாயிறு (20) ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதன் படி , கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட 66 பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இன்று முதல் மூடப்பட்டுள்ளது.
அத்தோடு, மீன், இறைச்சி, கோழி ஆகிய சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. தனியார் கல்வி நிலையங்கள், பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து கிண்ணியாவைப் பாதுகாப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பை அவசியம் தாருங்கள் என வீதிதோறும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தலைமையின் கீழ், கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலங்கள் மேற்கொண்டு வரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளோடு, வலயக் கல்வி அலுவலகம், கிண்ணியா நகரசபை மற்றும் பிரதேச சபை, பிரதேச சபை, உலமா சபை, பள்ளிவாயல் சம்மேளனம், மஜ்லிஸ் அஸ் சூறா, பொலிஸ் நிலையம் மற்றும் சமூக அமைப்புக்கள் ஆகியவை இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.









No comments