Breaking News

ஜனவரியில் திருகோணமலைக்கு பல அமைச்சர்கள் விஜயம்




 (கியாஸ் ஷாபி) 

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி கூட்டங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பங்குபற்றலுடன் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

இன்று (17) மாவட்ட செயலகத்தில் திருகோணமலை மாவட்டத்தின் துறைசார் விடயங்களின் பிரச்சினைகள் ,தீர்வுகள் மற்றும் அது தொடர்பான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான விசேட செயலமர்வு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொறு துறைகளுக்குமான பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றில் எம்மால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை உரிய அமைச்சர்களுக்கு முன்வைப்பதன் மூலம் சாதகமான தீர்வுகளை பெறமுடியும். எனவே உரிய விடயங்களை தேவை முன்னுரிமையடிப்படையில் வரிசைப்படுத்துவதுடன் ஏனைய விடயங்களை திட்ட முன்மொழிவுகளை உரிய அமைச்சின் செயலாளர்களுக்கு கையளிப்பதன் மூலம் எதிர்வரும் ஆண்டிற்கான மாவட்டத்திற்கான அந்த ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையும் என்று அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

கல்வி,சுகாதாரம், விளையாட்டு அபிவிருத்தி,இளைஞர் விவகாரம்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,மகளிர் விவகாரம்,சிறுவர் அபிவிருத்தி,உள்நாட்டு மருத்துவம், திறன் அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி உட்பட பல அமைச்சுக்குரிய விடயங்கள் இதன்போது குழுக்களாக வகைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எம்.ஏ.அனஸ், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments