Breaking News

குறிஞ்சாக்கேணியில் முதலாவது கொரோனா தொற்றாளர்!

 


(கியாஸ்  ஷாபி)

கிண்ணியா பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முதலாவது  கோரோனா வைரஸ் தொற்றாளி இன்று (5) இனங்காணப்பட்டுள்ளார் என குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ.அஜீத் தெரிவித்தார். 

அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், சூரங்கல் கிராம சேவகர் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 2020.12. 23 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், PCR பரிசோதனைக்காக இவரது இரத்த மாதிரி மட்டக்களப்பு கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இவரது மருத்துவ அறிக்கையின் மூலம் இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பிட்டிருப்பதாக இன்று அங்கிருந்து  தகவல் கிடைத்திருக்கின்றது என்று தெரிவித்தார். 

அவர், மேலும் கூறுகையில்,  இவர் திருமணமான ஒரு பெண் என்றும், இவர் வாழைச்சேனை நீதிமன்றத்தில் பணிபுரிபவராக இருப்பதால், அங்கே தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இவரது வீடு சூரங்கல் கிராமத்தில் அங்கம் பக்கம் குடியிருப்புக்கள் இல்லாத ஒரு தனியான இடத்தில் இருப்பதால், ஏனையோருக்கு தொற்றக்கூடிய வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகும். எனினும், இவரது கணவர் கிண்ணியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது சம்மந்தமாக தீவிரமாக தகவல்களைத் திரட்டி வருகிறோம் என்றும் தெரிவித்த அவர், அந்தப் பெண்ணின் வீட்டையும், அவரது உறவினர் வீடுகள் இரண்டையும் தனிமைப்படுத்தியிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.  



 



 


No comments