Breaking News

உயிரிழந்த டாக்டரின் சடலம் தகனம்



நாட்டில் கொரோனா தொற்று காரணமாக வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, மேலும் சுமார் 50 வைத்தியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் எக்மோ இயந்திரத்தின் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த வட கொழும்பு போதான வைத்தியசாலை என அறியப்படும் ராகம போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 32 வயதான கயான் தந்தநாராயண என்ற வைத்தியரே உயிரிழந்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வைத்தியர் கயான் தந்தநாராயணவின் மனைவி, தனிமைபப்டுத்தலின் கீழிருந்து வந்த நிலையில் நேற்று காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் அழைத்து வரப்பட்டிருந்ததுடன், அவர் அவரது கணவரை அடையாளம் காட்டினார். அத்துடன் தன் கணவர் வைத்தியர் கயான் தந்தநாராயணவுக்கு இறுதி அஞ்சலியையும் அவர் செலுத்தியதாகவும் அதன் பின்னர் சடலத்தை தகனம் செய்ய விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டதாகவும் காலி நகரின் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஆர்.எம். நாசிம் தெரிவித்தார்.

இந்நிலையில், வைத்தியர் கயான் தந்தநாராயணவின் சடலம் இன்று (02) காலி, தடல்ல மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

No comments