பழங்குடியின மாணவர்களுக்கு விசேட கல்வித் திட்டம் ஆரம்பம்.!
(அ . அச்சுதன்)
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய மற்றும் பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்த சிறாருக்குத் தரமான கல்வியை வழங்குவதன் ஊடாக அம்மக்களது சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் திட்டம் ஒன்றை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நேற்று (07) ஆரம்பித்து வைத்தது.
இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவர் சண்முகம் குகதாசன் தலைமை தாங்கியதுடன் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் சி.ஸ்ரீதரன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் வ.கனகசிங்கம் மற்றும் மத குருமார் கல்வி மூகத்தினர் நன்கொடையாளர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவர் சண்முகம் குகதாசன் இவ்வாறு தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்றுக் கோட்டத்திலுள்ள சீனன்வெளி உப்பூறல் கல்லடி, இலங்கைத்துறை, வட்டவான் - மூதூர் கோட்டத்திலுள்ள பாட்டாளிபுரம் , நீலாக்கேணி, இளக்கந்தை, வீரமாநகர், நல்லூர்; குச்சவெளிக் கோட்டத்திலுள்ள மரம்வெட்டிச் சோலை, வீரஞ்சோலை, நாவற்சோலை, இரணைக்கேணி முதலிய சிற்றூர்களில் வறுமையான ஆனால் திறமையான ஏழாம் வகுப்பு படிக்கும் 25 மாணவரைக் கொண்டு வந்து தி/ உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி விடுதியில் வைத்து உணவு, உடை, உறைவிடம், கல்வி, உடற்பயிற்சி மற்றும் மருத்துவம் ஆகியன வழங்கிக் கற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கணிதம், அறிவியல், ஆங்கிலம், தொழில் நுட்பம் ஆகிய பாடங்களில் சிறப்புக் கவனம் செலுத்திக் கற்பித்து, மேற்படி மாணவரைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி மருத்துவர், பொறியியலாளர், சட்டவாளர் முதலிய துறைசார் வல்லுநர்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது .
இத்திட்டத்தைச் செயற்படுத்த மாதம் தோறும் 360,000 (மூன்று இலட்சத்து ஆறுபதாயிரம் ) ரூபா செலவு ஏற்படுகின்றது. மேலும் சீருடை, விடுதியுடை படுக்கைவிரிப்பு, தலையணை, நுளம்புவலை துவையல் எந்திரம் முதலியவற்றுக்கு 600,000 (ஆறு இலட்ம்) ரூபா தொடக்கச் செலவு ஏற்பட்டுள்ளது.
ஓர் உதவிக் கல்விப் பணிப்பாளர் , ஒரு பாடசாலை அதிபர், ஒரு சேவைக் கால அறிவுரையாளர், ஒரு வெளி ஆசிரியர், ஒரு குழந்தை மருத்துவர், திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நியமிக்கும் ஒருவர், வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கும் ஒருவர் ஆகியோர் கொண்ட ஒரு துறைசார் மதிபீட்டுக் குழு செயற்றிட்ட முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் என தனது உரையில் திருகோணமலை மாவட்ட நலன்புரிச்ச ங்கத்தின் தலைவர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.








No comments