கிண்ணியாவில் கொரோனா குறைவடைந்து செல்கின்றது..
கிண்ணியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. சுகாதார வைத்திய அதிகாரி
(கியாஸ் ஷாபி)
2021 ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 4 ஆம் திகதி வரையுமான காலப்பகுதிக்குள் கிண்ணியா சுகாதார பிரிவில் 124 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்னார். இதில் 120 பேர் சிகிச்சை பெற்று, குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இன்று (4) எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 202l, 02.23 ஆம் ஒருவர் மரணமானார். தற்போது நான்கு பேர் மாத்திரமே, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வாரம் கிண்ணியா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலய ஆசிரியர்கள் மூவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். ஆனால் இந்த தொற்று பாடசாலை கொத்தணி பரவல் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த மூன்று ஆசிரியர்களும் வெளி இடங்களிலே தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்ற விடயம் இந்த பாடசாலையில் கற்பிக்கும் ஏனைய ஆசிரியர்களும் மற்றும் தொற்றுக்குள்ளான ஆசிரியர்கள் கற்பித்த மாணவர்களும் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
எனவே, இந்த பாடசாலையை மூட வேண்டிய அவசியமும் இல்லை. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றார்கள் அச்சம் கொள்ளத் தேவையும் இல்லை.
இவ்வாண்டு முதலாவது தொற்றாளர் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி 49 வயதான பெண் ஒருவர் கிண்ணியா அகமட் லேனில் இருந்து அடையாளம் காணப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையுமான காலப்பகுதியில் கிண்ணியா சுகாதாரப் பிரிவில் 11 நபர்கள் மாத்திரமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கடந்த ஜனவரி, பெப்ரவரி ஆகிய இரு மாதங்களில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் துறைவடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது என்றும் தெரிவித்தார்.






No comments