Breaking News

அனர்த்த முகாமைத்துவ அணியினரால் உயிர்வாயு சிலிண்டர்கள் வழங்கி வைப்பு

 


(ஏ.பி.அப்துல் கபூர்)
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் திருமதி. ஷகிலா இஸ்ஸதீன் "நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியினருக்கு விடுத்த வேண்டுகோளின் பேரில் நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியினரின் அயராத முயற்சியின் காரணமாக தனவந்தர்களின் உதவியின் மூலமாக கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான 20 (உயிர்வாயு) ஒக்சிஜன் சிலிண்டர்களினை நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
உயிர்வாயு சிலிண்டர்களினை வழங்கி வைக்கும் நிகழ்வு (26) நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வைத்திய அத்தியட்சகர் கருத்து தெரிவிக்கையில்,
கொவிட் 19 கொரோணா தொற்று காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தனியான சிகிச்சைப்பிரிவொன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட சிகிச்சை பிரிவிற்கு மிக அவசரத் தேவையாக ஒக்சிஜன் சிலிண்டர்களின் தேவை காணப்பட்டது. எதிர்காலத்தில் நாம் எதிர்நோக்கவிருக்கும் கொவிட்19 சவாலை நிந்தவூர் மக்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளவே இவ்வாறான ஏற்பாடுகளை நாம் முன்னெடுக்கின்றோம் என்றார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி்.பைசால் காசிம் கருத்துரைக்கையில்,
எமது அயல்நாடான இந்தியாவில் உயிர்வாயு பற்றாக்குறை காரணமாக பல இலட்சக்கணக்கான மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டமையினை போன்றதொரு நிலைமை எமது பிரதேச மக்களுக்கும் ஏற்படக்கூடாதென்று நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியினர் பல நன்கொடையாளர்களின் உதவியினை பெற்று இந்த சிகிச்சை நிலையத்துக்கு தேவையாக இருந்த உயிர்வாயு சிலிண்டர்கள் வழங்கி நிறைவு செய்துள்ளனர் என்றார்.
இவ்வாறான பொதுவானதொரு அமைப்பின் தேவை இன்று மிகவும் அவசியமாகும். நன்கொடைகளை இவ்வாறான பொது அமைப்பிற்கு வழங்கி வைக்கப்படும்போது அதில் பல்வேறு பிரச்சினைளுக்கு தீர்வாக அமையும் என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தெரிவித்தார்.
நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் தலைவர் எஸ்.எம்.பி.எம்.பாறூக் இப்ராஹிம் தலைமையில் நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசிம், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் செயலாளர் அரச சட்டத்தரணி சக்கி இஸ்மாயில் உட்பட அனர்த்த முகாமைத்துவ அணியில் உறுப்புரிமை பெற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments